''இந்தியாவை பார்த்து சிரிக்காதீர்கள், வீரகேசரியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.." ஜனாதிபதியிடம் நேரடியாக கூறிய ஹர்ச

 
அமெரிக்காவின் தீர்வை வரி பற்றி  அதிகம் பேசப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலையை பார்த்து சிரிக்க வேண்டாம் ஏனெனில் நாம் வீழ்ந்திருந்த போது இந்தியா தான் எமக்கு கைகொடுத்தது. வீரகேசரி பத்திரிகைக்கு நான் வழங்கிய நேர்காணலில் ஒரு பகுதியை  மாத்திரம் ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.  இலங்கைக்கு 15 முதல் 20 சதவீதமளவில் வரி சலுகை கிடைக்கும்  என்று நான் குறிப்பிட்டிருந்தேன். வீரகேசரிக்கு வழங்கிய முழுமையான நேர்காணலை பாருங்கள். வீழ்ச்சியடைந்த நாட்டை பொறுப்பேற்றோம் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். பொருளாதாரம் பற்றி தெரியாதவர்களிடம் ஜனாதிபதி இதனை குறிப்பிட வேண்டும். இவ்விடயத்தில் எம்முடன் விவாதத்துக்கு எவரும் வந்தால் தரவுகளுடன் உண்மையை வெளிப்படுத்துவேன்  என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்
 
பாராளுமன்றத்தில்   நேற்று   வியாழக்கிழமை   இடம்பெற்ற  நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சபையில் சண்டித்தனமான முறையில் உரையாற்றினார். எம்மை கேலிக்குள்ளாக்கினார். ஜனாதிபதி எமது பழைய நண்பர் என்பதால் நாங்கள் அவரை நகைப்புக்குள்ளாக்கவில்லை. ஜனாதிபதி பதவிக்கான கௌரவத்தை நாங்கள் அவருக்கு வழங்குவோம்.

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த  நாட்டையே பொறுப்பேற்றதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.இது முற்றிலும் தவறானது.  2024 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்படும் போது பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகவும், திறைசேரியின் கையிருப்பு 5 பில்லியன் டொலர்களாகவும் காணப்பட்டது அத்துடன் 70 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் 1 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆகவே பொருளாதார ரீதியில் வீழ்ந்து எழுந்த நாட்டையே  ஜனாதிபதி பொறுப்பேற்றார்.

வீழ்ச்சியடைந்த நாட்டை பொறுப்பேற்றோம் என்று பொருளாதாரம் பற்றி தெரியாதவர்களிடம் குறிப்பிடுங்கள் முடிந்தால் எம்முடன் விவாதத்துக்கு வாருங்கள் தரவுகளுடன்  விடயங்களை வெளிப்படுத்துகிறோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். கடன் பெறும் எல்லை  வரையறுக்கப்பட்டுள்ளது. ஆகவே கடன் பெற்று வீதிகளை அபிவிருத்தி செய்ய முடியாது.

 வெளிநாட்டு கொள்கை ரீதியிலான கடன் பெற வேண்டுமாயின் ஆசிய அபிவிருத்தி மற்றும் ஜெய்கா நிறுவனங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை பெற பொருளாதார மறுசீரமைப்iபை மேற்கொள்ள வேண்டும்.

கடன் அல்லது அரச முதலீடுகள்  ஊடாகவேனும் ஆரம்ப செலவுகளை 13 சதவீதமாக குறைக்க  வேண்டும்.எண்ணியதை போன்று செலவு செய்ய முடியாது.
 
 தேர்தல் மேடைகளில் குறிப்பிட்டதை போன்று அரச செலவுகளை மேற்கொள்ள முடியாது.  வாய்க்கு வந்த அனைத்தையும் பேச முடியும். ஆனால் அதனை செயலில் காட்டுவது கடினம்.பொருளாதாரம் தொடர்பில் பெலவத்தையின் நிலைப்பாடு என்னவென்பதும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

எமது  கொள்கையை கேள்வியெழுப்ப முன்னர் தமது பொருளாதார கொள்கையை ஜனாதிபதி வெளிப்படுத்த  வேண்டும். கொடஹேவா வந்தார் சென்று விட்டார். அவர் எம்முடன் இல்லை.
கொடஹேவா வரலாமலிருந்திருந்தால் எமது பொருளாதார திட்டத்தை சமூகமயப்படுத்தியிருக்கலாம்.பெலவத்தையின் சூழ்ச்சியிலா கொடஹேவா எம் தரப்புக்கு வந்தார் என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.
 

 அமெரிக்காவின் தீர்வை வரி பற்றி  அதிகம் பேசப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலையை பார்த்து சிரிக்க வேண்டாம் ஏனெனில் நாம் வீழ்ந்திருந்த போது இந்தியா தான் எமக்கு கைக்கொடுத்தது.
வீரகேசரி பத்திரிகைக்கு நான் வழங்கிய நேர்காணலில் ஒரு பகுதியை  மாத்திரம் ஜனாதிபதி   குறிப்பிடுகிறார். இலங்கைக்கு 15 முதல் 20 சதவீதமளவில் வரி சலுகை கிடைக்கும்  என்று நான் குறிப்பிட்டிருந்தேன். வீரகேசரிக்கு வழங்கிய முழுமையான நேர்காணலை பாருங்கள். அதன் பின்னர் பேசுங்கள் என்றார்.